கடவுளால் ஏற்பட்ட பலன். குடிஅரசு - 30.1.1938

Rate this item
(0 votes)

மனித சமூகத்திலே எங்கு பார்த்தாலும் கடவுள், மத உணர்ச்சி இருந்து வருவதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், சமூக வாழ்விற்கு இந்தக் கடவுள், மதங்கள் அல்லாமல் - தேவை இல்லாமல், இயற்கையே பெரிதும் படிப்பினையாகவும், மனி தனை நடத்துவதாகவும் இருந்து வருகிறது. கால தேச வர்த்தமா னத்திற்கு ஏற்றபடியும், சமூக வாழ்வின் சவுகரியங்களை மனிதன் அமைத்துக் கொள்கிறான். இக்காரியங்களுக்குக் கடவுள், மத தத்துவங்களைப்பற்றியோ, அவைகளைப்பற்றிய கற்பனைகளைப்பற்றியோ மனிதன் சிந்திப்பதில்லை; சிந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதுமில்லை .

ஆனால், பயமும், சந்தேகமும், பேராசையும், பழக்கவழக்கங் களும், மற்றவர்களின் படிப்பினைகளும், சுற்றுப்புறமும் மனித னுக்கு கடவுள், மத உணர்ச்சியை உண்டாக்கிவிடுகின்றன. அவை எப்படி இருந்தபோதிலும், எங்களுக்கு அவைகளைப் பற்றி கவலை இல்லை. அந்த ஆராய்ச்சியிலும் நாங்கள் சிறிதும் காலத்தையோ, புத்தியையோ செலவழிப்பதில்லை.

ஆனால், மனித சமூகத்துக்கு தேவையான தொண்டு என்று நாங்கள் கருதிவரும் தொண்டுகளைச் செய்துவரும்போது, மனித சமூக சுதந்திர சுகவாழ்வுக்கு பிறவியிலேயே எதிரிகளாக உள்ள புரோகிதக் கூட்டத்தார் - மதத்தின் பேரால், கடவுள் பேரால் தங்கள் வாழ்க்கையை நிச்சயித்துக் கொண்ட சோம்பேறி மக்கள் - எங்கள் தொண்டிற்கு, கொள்கைகளுக்கு சமாதானம் சொல்லி எதிர்த்து நிற்க சக்தியற்ற கோழைகள், கடவுளையும், மதத்தையும் பற்றிக் குழப்பமாய்ப் பேசி அவைகளைக் குறுக்கே கொண்டு வந்து போட்டுவிடுகிறார்கள். 

கடவுளைப்பற்றி விளக்க இதுவரை எத்தனையோ ஆத்ம ஞானிகள், சித்தர்கள், முத்தர்கள் என்போ ரும், நாயன்மார்கள், ஆழ்வார்கள், அவதா ரங்கள், கடவுள்களால் அனுப்பப்பட்டவர் கள் என்பவர்கள் எவ்வளவோ அரும்பாடு பட்டிருக்கின்றனர். ஆனால் முடிந்ததா? முடிவு இதுதான் எனச் சொல்லப்பட்டதா? அல்லது இவர்களைப் பின்பற்றியவர்க ளுக்கு ஆவது புரிந்ததா? புரிய வைக்க முடிந்ததா?

"கடவுள் ஆதி இல்லாதது, அந்தமில்லாதது, உருவமில்லா தது, அது இல்லாதது, இது இல்லாதது, புரியப்பட்ட அறியப் பட்ட சங்கதி எதுவும் இல்லாதது'' என அடுக்கிக் கொண்டே போய், அப்படிப்பட்ட ஒன்று இருப்பதாக அல்லது இருக்கும் என்பதாக அல்லது இருந்துதானே தீரவேண்டும் என்பதாக அல்லது இருக்கிறதாக எண்ணிக் கொண்டுதான் ஆகவேண்டும் என்பதாக சொல்லிவிடுகிறார்கள். 

இன்று இந்நாட்டினரால் மனித ஆத்மாவுக்கு மீறிய ஒரு ஆத்மா உடையவர் என்று கருதி மகாத்மா என்று சொல்லப்படு பவராகிய தோழர் காந்தியார் "சத்தியம்தான் கடவுள்'' என்கிறார்.

சைவசமயிகள் (அன்பே சிவம்) “அன்புதான் கடவுள்" என்கின்றனர். ராமலிங்க ஸ்வாமிகள் என்று சொல்லப்பட்ட பெரியார் "அறிவுதான் கடவுள்'' (அறிவான தெய்வமே) எனக் கூறினதுடன் அன்றி, ஜாதி, சமயம், மோட்சம், நரகம், மோட்ச நரகங்களைக் கொடுக்கும். பானரப்பாடாகடவுள்கள் ஆகியவைகள் எல்லாம் வெறும் பித்தலாட்டங் கள் என பச்சையாகச் சொல்லிவிட்டார்.

தோழர்களே! உங்களை - ஆஸ்திகர்களை நான் கேட்கிறேன், இவர்கள் எல்லாம் நாஸ்திகர்களா?

ஒரு மனிதன், கடவுள் உண்டா இல்லையா என்ற விஷயத் திலே கவலை செலுத்தாது, அதை அறிவதற்கு மெனக்கெட்டு, குழப்பமடையாது இருப்பதற்கு ஆகவே மனித சமூக வாழ் வுக்கு நன்மையும், அவசியமுமான காரியங்கள், குணங்கள் எவை எவையோ அவைகளைத்தான் கடவுள் என பெரியார்கள் சொன்னார்கள். இதைப் பார்த்தாவது மனிதனுக்கு அறிவு வந்து உண்மையுணர்ந்து பேசாமல் இருக்கவேண்டாமா என்கிறேன். 

ஒரு மனிதன் அறிவுடையவனாகி, உண்மையுடையவனாகி, மக்களிடம் அன்பு காட்டி, மனம், வாக்கு, காயங்களால் அவைகளைக் கொண்டு தொண்டு செய்து, அவைகளின்படி நடப்பா னேயானால், அவன் கடவுள் துரோகியாகக் கருதப்படுவானா என இங்கு ஆஸ்திகர்கள் யார் இருப்பினும் - சொல்லட்டுமே என்று தான் கேட்கிறேன். அன்பு, அறிவு, உண்மை இவை தவிர வேறு கடவுள் ஒன்று இருந்தா லும்கூட, அக்கடவுள் தன்னை இல்லை என்று சொன்னதற்கும், தன்னை விழுந்து கும்பிடாததற்கும் அப்படிப்பட்டவனை தண்டிப்பாரா என்று கேட்கிறேன். 

உண்மையில் யாரும் அறிய முடியாத ஒரு கடவுள் இருந்தால், அவரை அறிந்து, அவருக்கே பக்தி செய்து வணங்கி வந்தவனை விட, கடவுளைப்பற்றி கவலைப்படாமல், கடவுளுக்குப் பக்தி செய்யாமல், அன்பு, அறிவு உண்மை ஆகியவைகளுடன் நடந்து வந்தவனுக்கேதான் கருணை காட்டுவார் என்று உறுதி கூறுவேன். இந்த உணர்ச்சியினாலேயேதான் நான் கடவுளைப் பற்றிய விவாதத்தில் இறங்கிக் காலங்கழிக்காமல், நான் மனித சமுதாயத்திற்கு என்னாலான தொண்டை. 

நான் அறிவு, உண்மை, அன்பு ஆகியவைகளைக் கொண்டு செய்துவருகிறேன். - நான் கூறின மேல்கண்ட தத்தவங்கள், மதத் தலைவர்கள், அதிலே நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் ஆகியவர்கள் வாக்கு ஆகும்.

மற்றும், சித்தர்களும், வேதாந்திகளும் உலகமும் தோற்றமும், எண்ணங்களும் மனிதனுட்பட எல்லாம் மாயை என்று சொல்லி விட்டனர். ஆகவே, ஒரு மனிதன் தன்னை நிஜ உரு என்று கருதி, கடவுள் உண்டு என்று கண்டுபிடித்தாலும், முடிவு, கொண்டாலும் அதுவும் மாயை தானே ஒழிய உண்மையாய் இருக்க இடமில்லையே!

மகா அறிவாளியான சங்கராச்சாரியார் அஹம்பிரம்மம், நானே கடவுள் என்று கூறினார். அதற்காக சைவர்கள் அவரை "தானே கட்வுளெனும் பாதகத்தவர்” என்று தண்டிப்பதும் உண்டு. 

இதைப்போன்றே, சுமார் 10 வருஷங்களுக்கு முன்பு சைவர்களிடம் விவாதம் வந்த காலையில், சைவர்களுக்காக வக்காலத்து வாங்கிய சென்னை திரு.வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள் கடைசியில் "இயற்கையே கடவுள்" எனக் கூறி விவா தத்தை முடித்துக்கொண்டார். அது கண்ட சைவர்கள் அவர்களைச் சீறவே, பிறகு அவர், "அழகே கடவுள்; அழகு என்றால் முருகு ; தமிழர் தெய்வம் முருகன்; ஆதலால் கடவுள் என்றால் அழகுதான், வேறு கிடையாது'' என்று சொல்லிவிட்டார். அதற்கேற்றார்போல் அவர் அடிக்கடி “என் இயற்கை அன்னை; என் இயற்கை கடவுள்'' என்று பிரசங்கத்திலும் சொல்லுவார்.

இவை இப்படியிருக்க, சிலர் உலக நடத்தையைப் பார்த்து அதற்கு விவரம் புரியாமல், " இதற்கு ஏதோ ஒரு சக்தி இருக்க வேண்டாமா'' என்று கேட்கின்றனர். ஏதோ ஒரு சக்தி இருக்கட் டும். இருக்கவேண்டியவற்றையெல்லாம் நாம் கண்டுவிட் டோமா? இல்லாதவற்றையெல்லாம் உணர்ந்து முடிவு செய்து விட்டோமா? அதைப்பற்றிய விவாதம் ஏன் நமக்கு? என்றுதான் நான் கேட்கிறேன்.

மேலும், "மனித சமுதாயம் ஒற்றுமையாக, ஒழுக்கத்துடன், சமத்துவத்துடன் வாழ, சாந்தியாய் இருக்க ஏதாவது ஒரு விதமான கடவுள் உணர்ச்சி மனதனுக்கு வேண்டாமா?" என்று கேட்கிறார்கள். வேண்டுமென்றே வைத்துக் கொள்வதானால், அப்படிப்பட்ட உணர்ச்சியானது, மக்கள் சமூகத்தில் ஒழுக்கம், ஒற்றுமை, சமத்துவம், சாந்தி அளிக்கிறதா என்பதை முதலில் கவனிக்க வேண்டாமா? ஏனெனில், எந்த உணர்ச்சி காரணமாக மனிதனின் வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்படுமெனச் சொல்லப்ப டுகிறதோ , வாழ்க்கையில் நீதி, அன்பு நிலவ மேற்படி உணர்ச்சி தூண்டுகோலாய் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறதோ, அந்தக் கடவுள் உணர்ச்சிக்கும், அந்த உணர்ச்சிக் கொண்ட மனிதனுடைய நடத்தைக்கும் ஒருவித சம்பந்தமுமின்றிச் செய்து விட்டனர். பாது காப்பா

மற்றும், நமது கடவுளைக் கண்ட பெரியார்கள் என்பவர்கள், உலகத்திலே கேடு, கூடா ஒழுக்கம், வஞ்சனை, பொய் முதலியன செய்பவர்களை, இந்த மாதிரியான ஒரு கடவுள் உணர்ச்சியை தங்களின் மேல் கண்ட காரியத்துக்கு உபயோகப் படுத்திக் கொள்ளும்படி செய்துவிட்டார்கள். உதாரணமாக ஆயிரத்தில், பத்தாயிரத்தில் ஒருவரையாவது கடவுள் உணர்ச்சி யின் அவசியத்திற்கேற்றபடி அவர்களது வாழ்க்கையிலே நீதி, நேர்மை, ஒற்றுமை, அன்பு நிலவும்படி நடப்பதை நாம் பார்க்கிறோமா? பெரும்பான்மையோருக்கு அவ்வுணர்ச்சி அப்படி பயன்பட்டிருந்தால், உலகிலே துன்பத் துக்கு, வஞ்சனைக்கு இடமேது? எவ்வளவு அக்ரமம் செய்தபோதிலும் பிரார்த்தனை, கடவுள் பெயர் உச்சரிப்பு, புண்ய ஸ்தல யாத்திரை, புண்ய ஸ்தல ஸ்பரிசம் செய்த மாத்திரத்தில் மன்னிப்பும் பாப விமோசன மும் கிடைக்கும் - ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு, அதனால் மக்களுக்கு அக்ரமம் செய்யவே தைரியம் தருகிறதேயல்லாமல், யோக்கிய னாக, அன்பனாக நடக்க கட்டாயப்படுத்துகிறதா?

இன்று சிறையிலுள்ள 2 லட்சம் கைதிகளில் சம்சயவாதி களோ, நாஸ்திகர்களோ விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே இருப்பார்கள். மற்றையோர் யாவரும் கடவுள் உணர்ச்சியிலே ஒருவித சந்தேகமும் கொள்ளாத ஆஸ்திகர்களேயாகும். ஆகவே, அவர்கள் சொல்லும் கடவுள் உணர்ச்சியை மனிதனு டைய நடத்தையுடன் ஒப்பிட்டுப் பார்த்து, வரவு - செலவு கணக்கு போட்டு லாப நஷ்டப்படி இறக்கிப் பார்க்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

"இந்து" மத ஆள்களின் கடவுள் உணர்ச்சியைச் சற்று கவனிப்போம். "இந்து" மதக்காரர்கள் இந்தக் கடவுள் உணர்ச் சியை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் ! மத உணர்ச்சியை எவ்விதம் காட்டிக் கொள்ளுகிறார்கள்! என்று பாருங்கள். மக்களைக் காப்பாற்ற இருக்கும் கடவுளை இவர்கள் காப்பாற்ற முற்பட்டு அதற்காக ஒவ்வொரு கடவுளுக்கு இரண்டு மூன்று லட்சம் ரூபாய்கள் செலவில் கோயில்களும், ஒரு லட்சம் செலவில் கோபுரமும், கலசமும் வைத்து, அரை லட்சத்தில் கும்பாபிஷேகங்கள் செய்து, பூசைக்கும் திருவிழாக்களுக்குமா கப் பாடுபடும் மக்களின் கணக்கற்ற பணத்தைப் பாழாக்கிவிடுகி றார்கள்.

மனிதனில் இலட்சக்கணக்கான பேர் வீடின்றி வாடி வதை படுவது இவர்களுக்குத் தெரியாதா? இந்த மனிதர்களைக் கவனியாது, இவர்களுக்கு வீடு வாசல் வேண்டாமா என்பதை கவனியாது, கடவுள் ஆலயங்களின் திருப்பணி பேரால் எவ்வ ளவோ பணத்தை விரயம் செய்கிறார்கள். பாலின்றி வாடும் பச்சைக் குழந்தைகள் லட்சக்கணக்கில் இருக்க, நெய் என்பதைக் கண்ணில் கண்டறியாத குடும்பங்கள் எவ்வளவோ லட்சம் இருக்க, பழனி, திருவண்ணாமலை, ஸ்ரீரங் கம் முதலிய இடங்களில் ஆயிரக்கணக்கான குடம் பாலையும் கொட்டி சாக்கடை போய்ச் சேரும்படி பாழாக்குவதும், ஆயிரக்கணக் கான டின் நெய்யை நெருப்பை எரித்தும், நெருப்பில் கொட்டியும் வீணாக்குவதும் சரியா? கடவுள் உணர்ச்சியை இப்படித்தான் காட்டுவதா? பாலும், நெய்யும் மக்களுக்கு உண்ண ஏற்பட்டதா? கல்லிலும், நெருப்பிலும் கொட்ட ஏற்பட்டதா? ஏ, ஆஸ்திர்களே! உங்க ளைத்தான் கேட்கின்றேன். 

இந்த முட்டாள்தனத்தையும், கொடுமையையும் ஒழிக்க இது வரை என்ன செய்தீர்கள்? பச்சை வெண்ணெயை டின் டின்னாகக் கொண்டு போய் களிமண் மாதிரி வாரி வாரி நெருப்பில் எறிகிறதைப் பார்த்து ஆனந்தப்படுகிறாயே! கடவு ளும் ஆனந்தப்படும் என்று எண்ணுகிறாயே !! ஏ, ஆஸ்திகனே! நீ உன்னை மனிதன் என்று எண்ணிக் கொண்டுதானே இருக்கிறாய்?

ஒழுக்கத்துக்காக - மனிதனின் நல் வாழ்க்கைக்கு ஆக கற்பிக்கப்பட்ட கடவுளை தாசி வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகிறாயே, மற்றொருவன் பெண்ணை தூக்கிக் கொண்டு வருகிற உற்சவம் நடத்துகிறாயே, குறத்தியையும், துலுக்கச்சி யையும் கூட்டி வந்ததாக அதற்கு ஒரு கோயிலும் கட்டி பொம்மை வைத்து விளையாடுகிறாயே, இதுவா கடவுள் ஒழுக்கம்? |

அஹிம்சை, அன்பு, கருணை ஆகிய குணங்களைக் கொண் டது கடவுள் என்று சொல்லிவிட்டு, கழுவேற்றுவதும், கழுத்தை வெட்டுவதும், வயிற்றை கிழிப்பதும் இப்படிப்பட்ட கடவுள்கள் கைகளில் கத்தி, ஈட்டி, சூலாயுதம், வில்லு, வேல், தண்டாயுதம் கொடுத்திருப்பதும் யோக்கியமா? இவற்றிற்கு வேலை கொடுப்பதும் உற்சவம் செய்வதுமான காரியத்தால் மனிதனுக்கு ஒழுக்கம், அஹிம்சை, அன்பு ஏற்படுமா? ஏ, ஆஸ்திகர்களே, சிந்தித்துப் பாருங்கள்.

கடவுளுக்கு என்று ஒரு காசுதான் ஏன் செலவழிக்கவேண்டும்? செங்கல்பட்டு மாகாண சுயமரியாதை மாநாட்டில், கடவுளுக்கு ஒரு காசுகூட செலவழிக்கப்படாது என்று சகல ஹிந்து மத ஆஸ்திகர்களும் வந்திருந்து தீர்மானம் செய்தார்கள். சிறிதாவது கவனிக்கப்படுகிறதா? கடவு ளுக்கு ஆக செலவழிக்கப்படும் பணம், காசு, செலவுகள் யார் வயிற்றை நிரப்புகி றது? பாடுபடாது வயிறு வளர்க்கும் பார்ப்ப னர்களுக்கும், ரயில்காரனுக்கும்தான் பெரிதும் இப்பணம் போய்ச் சேருகிறது. இப்ப டிச் சேரும் பணம் வருஷம் பல கோடி என்பது உங்களுக்குத் தெரியாதா? 

இருக்கும் ஸ்தலங்கள் போதாதென்று, இருக்கும் புண்ணிய ஸ்தலங்களும், தீர்த்தங்களும் போதாதென்றும் ஒரு புதிய ஸ்தலத்தை புண்ணிய ஸ்நான கரையை பார்ப்பனரும், ரயில் வேக்காரரும் ஒப்பந்தம் செய்து கொண்டு பிரமாதமாக விளம்ப ரப்படுத்துகிறார்கள். அதாவது, கோடிக்கரை என்ற இடத்து உப்புத்தண்ணரில் ஒரு முழுக்குப் போட்டுவிட்டால் எப்படிப் பட்ட பாபமும், முன்னோர் செய்த பாபமும், இனிமேல் செய்யும் பாபமும் போய்விடுமெனவும், அவ்வளவு மகிமை உடையதெனவும் "மித்திரன்'' விளம்பரப்படுத்துகிறது. இதற்கு மஹோதய புண்ணியகால ஸ்நானம் எனப் பெயராம். ரயில் வேக்காரரும், பார்ப்பனரும் சேர்ந்து செய்யும் இச்சூழ்ச்சியில் எத்தனையோ ஆயிரக்கணக்கானவர்கள் சிக்கி அங்கு சென்று தங்கள் பணம், மானம், சுகாதாரம் ஆகியவற்றைப் பாழாக்கிக் கொண்டு, திரும்பி வரும்போது கூடவே காலராவையும் அழைத்துக் கொண்டுதான் வீடு திரும்பப் போகிறார்கள். இது என்ன நியாயம் என்று கேட்கிறேன். " கோடிக்கரை'' சென்று குளிக்க வேண்டிய அவ்வளவு பாபம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கிறேன். .

காலை முதல் மாலைவரை பாடுபட்டு உழைத்து, பணத்தை முதலாளிக்கும், பார்ப்பானுக்கும் கொடுத்துவிட்டு, கையைத் தலையின்கீழ் வைத்துக்கொண்டு படுக்கிற நீங்கள், கோடிக்கரை செல்லவேண்டிய அவ்வளவு பாபம் நீங்கள் எப்படிச் செய்திகள்? தொழிலாளியின் வாழ்வே இதனால் பாழாகிறது. முதலாளி யுடன் போட்டியிட்டு, தன் நிலைமையை உயர்த்திக் கொள்ள வேண்டிய சக்தியை இழந்து, இதனால் பணம், நேரம், புத்தி ஆகியவை இழந்து அவன் தவிக்கிறான். இதற்குத்தானே இந்தக் கடவுள் திருவிழாவும், புண்ணிய ஸ்நானங்களும் உதவுகின்றன.

இந்துமத ஊழல்களை திருத்தப்பாடு செய்த புது மதக் கொள்கைகளே இன்று கிறிஸ்து மார்க்கம், முஸ்லிம் மார்க்கம் முதலிய பல புதிய மார்க்கங்களாக தோன்ற லாயின. இந்துமத கொடுமை தாங்கமாட்டா மலேதான் பல கோடிப்பேர்கள் முஸ்லிம்களாகவும், கிருஸ்துவர்களாகவும் ஆனார்கள். இன்றும் இந்துக்கள்தான் பிற மதம் புகுகிறார்கள். என்றாலும், முஸ்லிம் மார்க்கம் தவிர, வேறு எந்த மார்க்கத்துக்கு மனிதன் போனாலும் அவன் பின்னாலேயே ஜாதிச் சனியன் 

தொடர்ந்து கொண்டே போகிறது. உதாரணமாக, ஒருவர் கிறிஸ் துவனான பிறகும், பார்ப்பனக் கிறிஸ்துவன், பள்ளக் கிறிஸ்துவன், பறை கிறிஸ்துவன், நாயுடு கிறிஸ்துவன், ஆசாரி கிறிஸ்து வன், நாடார் கிறிஸ்துவன் என்கின்ற பாகுபாடும், சடங்கு ஆச்சார அனுஷ்டானமும் எந்தக் கிறிஸ்துவனையும் விட்டு தொலைவதில்லை. பிரார்த்தனை ஸ்தலங்களிலும் இந்துக் கோயில்கள் போல் பேதங்கள் பல இருந்து வருகின்றன.

ஆனால், இந்த இழிவு ஆபாசம் முஸ்லிம் மார்க்கத்திலே காண முடிவதில்லை. ஒரு தீண்டாதான், முஸ்லிம் மதத்தை தழுவிவிட்டால், உடனே தீண்டாமை பறந்து போகிறது. அவன், அந்த சமூகத்தில் மனித சுதந்திரத்தை, சமத்துவத்தைப் பெறுகிறான். அங்கு பற முஸ்லிம் என்று யாரோனும் சொல்லி, தங்கள் பற்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. ஏன்? அவர்கள் தங்கள் மதத்தினிடை சமத்துவம் நிலவ வேண்டுமென்ற உணர்ச் சியை அவ்வளவு அதிகமாகக் கொண்டுள்ளார்கள். அதனா லேயே தீண்டாமையை விலக்கிக் கொள்ள வேண்டுமென்கிறவர் களை முஸ்லிம் மார்க்கத்தை தஞ்சமடையும்படி இந்த 10 வருஷமாய் சொல்லி வருகிறேன். 

இந்த மாபெரும் சனியான ஜாதி, மத பேத தொல்லைகள் மனித சமூகத்தைவிட்டு தொலையவேண்டுமானால் மனிதனுக்கு விஞ்ஞான ஞானமும், நாட்டில் விஞ்ஞான வளர்ச்சியும் தேவை. தொழில் காரணமாகத்தான், தொழில்கள் ஆதாரமாகத்தான் ஜாதி களோ ஜாதிக் கொடுமைகளோ ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. தோட்டி என ஒரு ஜாதியும், அவனுக்கு இழிவும் தீண்டாமையும் எப்படி ஏற்பட்டது? மலம் எடுக்கும் தொழிலை, நாற்றமுள்ள தொழிலை அவன் ஏற்றுக்கொண்டதால் தான். இப்படியே கஷ்ட மானதும், இழிவானதுமான வேலை செய்பவர்கள் எல்லாம் கீழ் ஜாதியாகவும், சுகமாகவும், மேன்மையாகவும் உள்ள

வேலை செய்கிறவர்கள் மேல் ஜாதியாகவும், ஒரு வேலையும் செய்யாமல் ஊரார் உழைப்பில் வயிறு வளர்த்துக்கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு வஞ்சித்துத் திரிகிறவர் கள் மகாமகா மேல்ஜாதியாகவும் ஏற்பட்ட தற்குக் காரணம் விஞ்ஞான ஞானமில்லா மையே . மேனாட்டிலே இம்மாதிரியான தொல்லை அநேகமாக தீர்ந்துவிட்டது.

விஞ்ஞான வளர்ச்சி காரணமாக, சமத்துவம் அந்த சமூகத்திலே உண்டாக மார்க்கம் ஏற்பட்டுவிட்டது. நாம் என்ன கூறினாலும், இனிமேல் நமது பின் சந்ததியார்கள், பழைய தொழில்முறை, ஜாதிமுறை திட்டத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது உறுதி. உலகம் இன்று புதிய பாடத்தைக் கற்பித்துக் கொண்டு வருகிறது. விஞ்ஞான வளர்ச்சி - மூலமாகவே விமோசனம் ஏற்படும் என்ற உறுதி எனக்கு ஏற்பட்டிருக்கிறது. பழமையான சகல முறைகளும் மாறி சகல துறைகளிலும் புதுமை தோன்றியி ருக்கிறது. வெகு சீக்கிரத்தில் புதிய உலகம் காணப் போகிறோம். 

மக்கள் பிறப்பதுகூட இனி அருமையாகத்தான் போய்விடும். அதுபோலவே, சாவும் இனி குறைந்துவிடும். மனிதன் வெகு வெகு சுலபமாக நூறு ஆண்டு வாழ முடியும். யாரும் சராசரி ஒன்று இரண்டு பிள்ளைகளுக்குமேல் பெற மாட்டார்கள். ஆண், பெண் புணர்ச்சிக்கும், பிள்ளைப் பேற்றுக்கும் சம்பந்த மில்லாமலே போய்விடும். வேலை செய்கிற குதிரைகள் வேறு, குட்டி போடுகிற - போடச் செய்கிற குதிரை வேறு என்கிற மாதிரி, மனித சமூகத்தில் இருக்கும் பிள்ளை பெறும் தொல்லை, வளர்க்கும் தொல்லை, அதற்குச் சொத்து சுகம் தேடும் தொல்லை ஒழிந்துபோகும் என்கின்ற நம்பிக்கை எனக்கு உண்டு. மனிதன் அறிவு பெற்றதற்குக் காரணம் சாமி விளை யாட்டும், பிள்ளைகள் உண்டாக்கும் விவசாயப் பண்ணையும் தானா? மனித அறிவின் எல்லையைக் காண வேண்டாமா? செல்வம் - தரித்திரம், சுகம் - கஷ்டம், கவலை, தொல்லை இதுதானா மனிதனின் கதி மோட்சம்?

பெண்களை ஆண்கள் நடத்துகிற மாதிரியும், படுத்துகிற பாடும் போல் உலகத்தில் வேறு எந்த ஜீவனாவது செய்கிறதா? பெண்களிடம் சக்தி சொரூபத்தையும், தெய்வத்தன்மையை யும், காதல் களஞ்சியத்தையும், தாய்மையையும், அன்பபை யும் கண்ட 'பெரியார்கள்" என்னும் மிருக சிகாமணிகள் பெண்களைப்பற்றி எப்படி எழுதி வைத்தி ருக்கிறார்கள்; எப்படி நடத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால், உல கில் சுயமரியாதை உள்ள பெண்கள் குழந் தைகள் பெறவே மாட்டார்கள். அப்படி பெற நேர்ந்தாலும், பிறந்தது ஆண் குழந்தை என்று கண்டால் கழுத்தை திருகிவிடுவார் கள். இது விஷயத்தில் மனிதன் திருத்தப்பட 

முடியாவிட்டால் எந்த மனிதனும் மனிதத்தன்மைக்கு அருகதை யற்றவன் என்றே சொல்லுவேன். பெண்ணுக்குச் சொத்து கூடாதாம், காதல் சுதந்திரம் கூடாதாம். அப்படியானால், மனி தன் தன் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளும் ரப்பர் பொம்மையா, அடிமை உருவா அது என்று கேட்கிறேன். 

பெண்களில் விதவைகள் என்று ஒரு நிலைமை ஏன் இருக்க வேண்டும்? கல்யாணம் செய்துகொண்டதால்தானே இந்தக் கொடுமை? கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால் பெண் எப்படி விதவையாக முடியும்? கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பதில் பெண்களுக்கு இரண்டுவித லாபம் இருக்கிறது. குழந்தை பிறக்காது என்பதுடன், விதவையும் ஆக முடியாது; அடிமை நிலையும், சொத்து வைத்திருக்க உரிமையற்ற நிலையும் இருக்க முடியாது. உலகில் உள்ள சகல கொடுமைகளிலும் விதவைக் கொடுமையே அதிகமானது. 

மற்றும், விபச்சாரம் பெருகுவதற்கு விதவைத் தன்மையே காரணம். ஒவ்வொரு பெற்றோர்களும் பெரிதும் தங்கள் குழந்தை, சகோதரி விதவைகளை "இலை மறைவு காய்மறை வாய்" கலவி உணர்ச்சியை தீர்த்துக் கொள்ள சம்மதிக்கிறார் களே ஒழிய, ஒரு புருஷனுடன் சுதந்திரத்துடன் வாழ இடம் கொடுப்பதில்லை. இதுதானா கடவுள், மதத்தன்மை ஏற்பட்ட பலன் என்று கேட்கின்றேன். 

(23.1.1938 அன்று ஆயக்கவுண்டன் பாளையத்தில் நடைபெற்ற மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையில் கடவுள் பற்றிய பகுதி - ''குடிஅரசு” 30.1.1938)

Read 34 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.